InformationNeeds.com
Home/கட்டுரைகள்/சித்தர்களுக்கு குருநாதராக மூன்று முகங்களுடன் அருள்பாலிக்கும் சிவகிரி முத்து வேலாயுத சுவாமி கோயில் - Sivagiri Muthu Velayutha Swamy Temple is Blessed With Three Faces
Spirituality

சித்தர்களுக்கு குருநாதராக மூன்று முகங்களுடன் அருள்பாலிக்கும் சிவகிரி முத்து வேலாயுத சுவாமி கோயில் - Sivagiri Muthu Velayutha Swamy Temple is Blessed With Three Faces

January 19, 2025uma682 views

ஈரோடு மாவட்டம் கோபியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் 9 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

முருகப்பெருமான் பல திருக்கரங்கள், பல திருமுகங்கள் என பல சன்னதிகளில் தோன்றினாலும், மூன்று முகம் கொண்ட முருகனைப் பற்றி எந்த குறிப்பும் கிடைக்கவில்லை. ஆனால் அரிதாக, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் வட்டம்  காசிபாளையம் பகுதியில், சிவகிரி குமரன் கரடு என்ற மலையில், குமார பகவான் மூன்று முகங்கள் மற்றும் ஆறு திருக்கரங்களுடனும் அருள்பாலிக்கிறார்.

இந்த ஊருக்கு கிழக்கே சுமார் 1 கி.மீ தொலைவில், சத்தி-ஈரோடு நெடுஞ்சாலையின் வடக்குப் பகுதியில், கிழக்கு மேற்கு திசையில் மூன்று சிறிய மலைகள் வரிசையாக நிற்கின்றன. மலையின் மேற்குப் பகுதியில் அருள்மிகு மாதேஸ்வரன் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். கிழக்கு புறமாக உள்ள மலையில் மூன்று முகங்கள் மற்றும் ஆறு கரங்களுடன் அருள்பாலிக்கும் முருகப்பெருமான் "ஸ்ரீ முத்து வேலாயுதசுவாமி" என்ற திருநாமத்துடன் வள்ளி தெய்வானை சமேதராக 3 அடி உயர கருங்கல் திருமேனியுடன் வீற்றிருக்கிறார்.

அமைப்பு:

ஸ்ரீ மூன்று முக வேலாயுதசுவாமியின் வலதுபுற மூன்று கரங்களில் வஜ்ராயுதம், அம்பு, சின்முத்திரையும், இடதுபுற மூன்று கரங்களில் மான், வில், அபயகாரத்துடன் பாம்பு மற்றும் பின்புறம் மயிலுடன் காட்சியளிக்கின்றார். பொதுவாக

முருகன் கோவில்களில் கருவறைக்கு முன் மயில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த கோவில் முன்பு சக்திவேல் அமைந்திருக்கும். இது சூரபத்மனை வதைக்க உமாதேவியரால் கொடுக்கப்பட்டது. இந்த வேலின் ஒருபுறம் சரவணபவ சக்கரமும், மறுபுறம் 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்துடன்  சூலாயுதமும் வஜ்ராயுதமும் பொறிக்கப்பட்டுள்ளது.

முருகப் பெருமான் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய மும்முகத்துடன் தோன்றி மக்களுக்கு அருள்பாலிக்கிறார். குமரன் குடியுள்ள கரட்டில் பதினெட்டு சித்தர்களும் அரூப வடிவில் வந்து ஈசனையும் முருகனையும் வழிபட்டதாக ஐதீகம்! இக்கோயில் 700 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என அறியப்படுகிறது. இக்கோவிலை பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு, அதற்காக ஊர் கூடி மூன்று முகம் கொண்ட ஸ்ரீ முத்து வேலாயுத சுவாமி கோவில் உருவானது.

எனவே, இக்கோயிலில் நடைபெறும் ஒவ்வொரு பணிகளும் இறைவனின் கட்டளையைப் பெற்ற பின்னரே மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது, ​​ஆகம விதிப்படி, கருவறை,  அர்த்த மண்டபம் முன்பாக மகாமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மலை ஏறுவதற்கு படிக்கட்டுகள் மட்டுமின்றி வாகனங்கள் செல்ல சாலை வசதியும் உள்ளது. விசேஷ நாட்களில் தேர்கள் செல்லும் வகையில் கோவில் வளாகம் விரிவுபடுத்தப்பட்டு, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும்  மற்றொரு சிறப்பாக  நவக்கிரகங்கள் தங்கள் தேவியருடன் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். கோயிலின் பின்புறம் - ஸ்ரீ சக்கரத்தின் மீது மகா மேரு அமைக்கப்பட்டு, சித்தர்கள் சூழ மகா சபை உள்ளது. இங்கு முருகப்பெருமான் குருநாதராக தவக் கோலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்தச் சிறப்பு வட தமிழகத்தில் எங்கும் இல்லை.  கோவில் முன்புறத்தில் படிப்பிள்ளையார் எழுந்தருளுகிறார். மேலும் மகாமண்டபத்தின் முன் இடும்பர் மற்றும் கடம்பர் சிலைகள் உள்ளன.

சித்தர்கள் வழிபடும் திருத்தலம்:

மாதவம் புரியும் மாதேஸ்வரன் குடிகொண்டதாலும், மகன் முருகன் குடிகொண்டதாலும், ஞானவேல் நின்று அருள்புரியும் தலமானதாலும் அனைத்து சித்தர்களும் சித்தி அடைய வேண்டி தவம் செய்ய உகந்த இடமாக தேர்ந்தெடுத்த இந்த சிவகிரி கரட்டில் மகாமேருவை மையமாகக் கொண்டு 18 சித்தர்கள், மஹா கணபதி, சிவகுருநாதர் எனும் ஞானஸ்கந்தர், அகத்தீசர், நந்தியம்பெருமான் ஆகியோர் பிரபஞ்ச நாயகர்களாக உள்ள சித்தர்சபை அமைக்கப்பட்டுள்ளது.சபையின் நடுவில் மகா மேரு உள்ளது, அதற்கு முன்னால் நந்தி பகவான் மற்றும் சிவலிங்கம் உள்ளது. இங்கு முருகப் பெருமான் தவக்கோலத்தில் வீற்றிருந்து பதினெட்டு சித்தர்கள் சபைக்கு தலைமை தாங்குகிறார். பெளர்ணமி, சஷ்டி, கிருத்திகை மற்றும் பிரதோஷ நாட்களில் தரிசன நேரங்கள் அதிகரிக்கும். 

சிறப்புமிக்க ஸ்ரீ சக்கரம்:

சிவகிரி ஸ்ரீ முத்து வேலாயுத சாமி கோவில் வளாகத்தில், அதன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் - கயிலைநாதர் சன்னதி பின்புறம் - சித்தர் சபை நிறுவப்பட்டுள்ளது. ஸ்ரீ சக்கரம் என்பது மகாமேருவின் சமப்படுத்தப்பட்ட வடிவம். பழங்காலத்திலிருந்தே ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில்கள் ஈர்ப்புத்தன்மை அதிகரித்து பிரபலமடைந்து வருவதைக் காணலாம்.

அம்பிகையை சாந்தப்படுத்த சர்வேஸ்வரன் உக்கிரக் கலையை ஸ்ரீ சக்கரமாக ஆகர்ஷித்து, அம்பிகையின் எதிரில் நிறுத்தியதாக கூறப்படுகிறது. கலியுகத்தில் பூர்வ புண்ணிய சேர்க்கை இருந்தால் மட்டும் தான் சக்தியை வழிபட்டு மகத்துவம் அடைய முடியும். அன்னையின் ஸ்ரீ சக்கரம் ஒன்பது கட்டுகளைக் கொண்டது. சாதாரண கோடுகளாகவும், முக்கோணங்களாகவும் நம் கண்களுக்குத் தெரியும் ஸ்ரீ சக்கரம், அம்பிகையின் இருப்பிடம் மட்டுமல்ல, சர்வ சக்திகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

ஸ்ரீ சக்கரம் என்பது மனிதர்களின் துயரங்களை நீக்கி, அன்னையின் பரிபூரண அருளைத் தரும் வடிவம். உலகைக் காக்கும் நாயகி ராஜராஜேஸ்வரி மகாமேருவில் வசிக்கிறாள். மகாமேருவின் உருவமே ஸ்ரீ சக்கரத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. மந்திரம், எந்திரம் மற்றும் தந்திரம் ஆகியவற்றால் மகாசக்தியை வழிபடுவது வழக்கம். இந்த மூன்றும்  முக்கோணத்தின் மூன்று மூலைகள். அன்னையின் அருளாசியைப் பெற ஸ்ரீ சக்கர வழிபாடு சிறந்தது என்கிறது தேவி புராணம்.

நமது ஸ்ரீ மூன்று முக முத்து வேலாயுத சுவாமி கோவிலில், ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும், மகா மேரு ஸ்ரீ சக்ர நாயகி மற்றும் பதினெட்டு சித்தர்களுக்கு மிகவும் விசேஷமான பூஜை செய்யப்படுகிறது. இந்த மகா பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனின் அருள் பெறுவர்.

 

சித்தர்களுக்கு குருநாதராக மூன்று முகங்களுடன் அருள்பாலிக்கும் சிவகிரி முத்து வேலாயுத சுவாமி கோயில் - Sivagiri Muthu Velayutha Swamy Temple is Blessed With Three Faces | InformationNeeds